Tuesday, October 5, 2010

பூமி நனைத்திட..,மழைக்காடுகள்


நான்
உயர உயர வளர்ந்து
முட்டி மோதி - என்
பருவம் புடைத்து
புனல் பெருக்கி
பூமி நனைத்திட
அந்த மழைக்காடுகள்
எங்கே!
என்றது பெண் மேகம்

நான்
வரண்டு வரண்டு
என் தேகம்
பிளந்து வெடித்து
காய்ந்து இருக்கிறேன்
என் மேனி குளிர
மோகம் கொண்டு
மன்மதத் தாரைகள்
பொழியும்
மேகங்கள் எங்கே!
கேட்டுக்கொண்டது பூமி

என் வெள்ளை மனது
கொள்ளை அழகால்
குளிர்ந்து நிமிந்து
கல் மலையானேன்
அந்த சூரிய ஒளியால்
கருகிக் கருகி - இன்று
உருகி உருகி
கடலாகிறேன்
கண்ணீர் சொரிந்தது
துருவப்பனிக்கட்டிகள்

கரும்புகை - கடும்
பார வாயுக்கள்
பச்சை வீட்டு வாயுக்கள்
பெருக்கம் இவற்றால்
சூரியஒளி வெளியேற்றத்
தடுக்கம்
என் தேகம்
வெப்பத்தால் புழுக்கம் என்று
புழுங்கியது பூமி

முடியவில்லை - புற
ஊதாக் கதிர்கள்
என்னை ஊடுருவுகின்றன
தடுக்க முடியவில்லை
நான்
நலிவுறுகின்றேன் என்னைக்
காப்பாற்றுங்கள்
கதறியது
ஓசோன் படை

ஓ.....!
இதுதான்
கைத்தொழில் புரட்சியின்
கால வெளியீடுகளா..??
உலகமயமாதலின்
உன்னத விளைவுகளா....???

மனம் கொண்ட
மனிதனே!
உலக உருண்டையில்
உன் உயிர்ச்சுவடுகள்
எச்சப்படுமுன்
உலகில் உன்னை
நிச்சயப்படுத்திக்கொள்
உலகைக்காப்பாற்று
உன்னைத் தேக்கிக்கொள்ளலாம்...

--சிதறல்கள்.காம்--

No comments:

Post a Comment